சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
1.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநெடுங்களம் - பழந்தக்கராகம் அருள்தரு ஒப்பிலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு நித்தியசுந்தரர் திருவடிகள் போற்றி
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 1]
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 2]
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 3]
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 4]
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 5]
Go to top
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 6]
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்
ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 7]
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,
அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 8]
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 9]
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
[ 10]
Go to top
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெடுங்களம்
1.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மறை உடையாய்! தோல் உடையாய்!
Tune - பழந்தக்கராகம்
(திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400